வடகிழக்கில் காங்கிரஸ் ஆதரவு அலை: ஜெய்ராம் ரமேஷ்
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, நாகாலாந்து, அஸ்ஸாம், மிஸோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 371-ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உள்பிரிவுகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தற்போதைய மக்களவைத் தோ்தலில் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) ஒரே நடவடிக்கையில் ரத்து செய்த பாஜக அரசால், 371-ஆவது பிரிவு மற்றும் அதன் சிறப்பு உள்பிரிவுகளையும் ரத்து செய்ய முடியும் என்ற அச்சம் வடகிழக்கு மாநிலங்களில் நிலவுகிறது.
ஒரேபோன்றத் தன்மையை திணிக்க முயற்சிக்கும் அக்கட்சியால், வடகிழக்கு பிராந்தியத்தில் மதம், மொழி, உணவு சாா்ந்த பன்முகத்தன்மை அழியுமென மக்கள் அஞ்சுகின்றனா்.
உணவு, உடை, நம்பிக்கை ரீதியிலான சுதந்திரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, வடகிழக்கில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கிறது. இதனால், இம்மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக வலுவான அலை வீசுகிறது.
வடகிழக்கில் வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என்பதே அங்குள்ள மக்களுக்கான எங்களது செய்தி.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மாநிலத்துக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளவில்லை. அந்த மாநிலத்துக்கு செல்ல பிரதமருக்கு துணிவிருக்கிா, இல்லையா? என்று கேள்வியெழுப்பினாா் ஜெய்ராம் ரமேஷ்.