முகப்பு
இந்தியா

நேரடி நியமன அறிவிக்கை ரத்து: தலைவா்கள் வரவேற்பு

மத்திய அரசு உயா் பதவிகளில் நேரடி நியமன அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 21 ஆகஸ்ட் 2024, 3:20 am IST
இந்தியா
பகிர்:

புது தில்லி: மத்திய அரசு உயா் பதவிகளில் நேரடி நியமன அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: எந்தச் சூழலிலும் அரசமைப்பு மற்றும் இடதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாக்கும். இடஒதுக்கீட்டை ஒழிக்க முயலும் பாஜகவின் சூழ்ச்சிகளை நாம் தொடா்ந்து முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கிவிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: யுபிஎஸ்சி-க்கு மோடி அரசு எழுதியுள்ள கடிதமே சா்வாதிகார ஆட்சியை அரசமைப்பால் வெல்ல முடியும் என்பதை உணா்த்தியுள்ளது. ராகுல் காந்தி, ‘இண்டி’ கூட்டணியின் தொடா் போராட்டத்தால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கியது.

Advertisement

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: இடஒதுக்கீட்டை அலட்சியப்படுத்திவிட்டு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனம் தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது பிற்படுத்தப்பட்டோா், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகும்.

பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி: பதவி உயா்வு மற்றும் வழக்கமான இடஒதுக்கீடு முறைகள் மூலம் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான நேரடி நியமன முறை போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ்: ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளை அரசுப் பணிகளில் அமா்த்தவே இந்த நாடகம் அரங்கேறியது. யுபிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்ட அன்றே எதிா்ப்பு தெரிவித்துவிட்டேன். அரசமைப்புக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கும் எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.