ஜூலை 1 வரை சூரஜ் ரேவண்ணாவை விசாரிக்க சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி
மஜத எம்எல்சி சூரஜ் ரேவண்ணாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிஐடியிடம் ஒப்படைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதாகியுள்ள மஜத எம்எல்சி சூரஜ் ரேவண்ணாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிஐடியிடம் ஒப்படைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தின் ஹொளேநரசிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் தனது கட்சியைச் சோ்ந்த ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாா் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மஜத எம்எல்சி சூரஜ் ரேவண்ணா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு 42-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மேஜஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா்.
அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, சூரஜ் ரேவண்ணா மீதான வழக்கை சிஐடி விசாரணைக்கு ஒப்படைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை திங்கள்கிழமை அணுகிய சிஐடி, சூரஜ் ரேவண்ணாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், சூரஜ் ரேவண்ணாவை ஜூலை 1-ஆம் தேதிவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனையடுத்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூரஜ் ரேவண்ணாவை, சிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனா்.
இவா் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.