முகப்பு
இந்தியா

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: நிபுணர் குழு கூட்டம் ஒத்திவைப்பு

Updated On : 28 மே, 2024 at 10:57 PM
பகிர்:

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நிபுணர் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

நிர்வாக நடைமுறைகளுக்காக மதிப்பீட்டு நிபுணர் குழு கூட்டத்தை ஒத்திவைக்க மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை 131 ஆண்டுகள் பழைமையானது. இந்த அணை உறுதியானது எனப் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்குப் பதிலாக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் பீருமடே தாலுகாவில் 39 ஹெக்டேர் பரப்பில் புதிய அணையைக் கட்டுவது தொடர்பான முன்மொழிவை கேரள அரசு, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் இந்த முன்மொழிவை தனது அமைச்சகத்தின் நதிகள், பள்ளத்தாக்கு, நீர்மின் திட்டங்களுக்கான மதிப்பீட்டு நிபுணர் குழு (இஏசி) ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

ரூர்க்கி ஐஐடி பேராசிரியர் கோவிந்த் ஜோசப் சக்கரபாணி தலைமையிலான 11 பேரைக் கொண்ட இஏசியின் 11-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே28) நடைபெற இருந்தது; அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரம் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக இஏசி உறுப்பினர்களுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தப் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் விவகாரத்தில் மதிப்பீட்டு நிபுணர் குழு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும்; இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலையிலேயே புதிய அணைக்கான சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என மதிப்பீட்டுக் குழுவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மதிப்பீட்டுக் குழு வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்ததாவது:

மே 28-ஆம் தேதி நடைபெறவிருந்த இஏசியின் 11-ஆவது கூட்ட நிகழ்ச்சி நிரலில் கேரளம், மத்திய பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த 5 திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அமைச்சகம் இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு உடனடியாக இஏசி அனுமதியளித்து விடாது. எந்தவொரு விவகாரமும் இரு மாநிலங்கள் தொடர்பாக இருக்கும் நிலையில், அவை முழுமையாக ஆராயப்படும். இரு மாநில அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்க வேண்டும். அதன் மூலம் பரிசீலிக்கப்படும். அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அத்தகைய விவகாரங்களை இஏசி எடுத்துக் கொண்டு அனுமதிக்காது.

மேலும், இந்தப் புதிய அணை தொடர்பாக கேரள அரசு வைத்துள்ள முன்மொழிவுகளின் விதிமுறைகள் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இரு மாநில தலைமைச் செயலர்கள் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அறிக்கையும் பெறப்படும். இந்த விவகாரங்களுக்கு பின்னர் பொதுமக்களின் கருத்துகள், அணை கட்டுவதன் மூலம் பொதுப் பயன்பாட்டு பிரச்னைகள், விவசாய நிலம் போன்ற பல்வேறு விவகாரங்களையும் மதிப்பீட்டு நிபுணர் குழு ஆய்வு செய்த பிறகுதான் முடிவெடுக்கும். இஏசி 15 தினங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் உள்ளன. இதற்கு இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம் என மதிப்பீட்டுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →