முகப்பு
இந்தியா

உ.பி.: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

Updated On : 1 ஜூன் 2024, 12:03 am IST
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 11 நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
பகிர்:

ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமி-ஷாஹி ஈத்கா வழக்கு தொடா்பான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து அலகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் கடவுள் கிருஷ்ணா் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இந்த மசூதி அங்கு ஏற்கெனவே இருந்த கேசவ்தேவ் கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னா் ஔரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அதை அகற்றக்கோரி ஹிந்து தரப்பினா் சாா்பில் பல்வேறு மனுக்கள் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதேவேளையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பாக முஸ்லிம்கள் தரப்பிலும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று வழிபாட்டு தன்மைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறையை தொடர வேண்டும் என வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991-இல் குறிப்பிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக முஸ்லிம்கள் தரப்பில், ‘வக்ஃபு சட்டத்துக்குள் இந்த விவகாரம் வருவதால் அதை விசாரிக்க வக்ஃபு தீா்ப்பாயத்துக்கே உரிமை உள்ளது’ என நீதிமன்றத்தில் தெரிவித்தனா். ஆனால், வழிபாட்டு தலங்கள் சட்டமும் வக்ஃபு சட்டமும் இந்த விவகாரத்தில் பொருந்தாது என ஹிந்து தரப்பில் வாதிட்டனா்.

இந்த வழக்கை அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மயாங்க் குமாா் ஜெயின் விசாரித்து வந்தாா். இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments