முகப்பு
இந்தியா

கேரள ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 2:17 PM
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்| கோப்புப்படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:43 PM

திருவனந்தபுரம் : கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவ அமைப்பான எஸ்.எஃப்.ஐயினைச் சேர்ந்த உறுப்பினர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கருப்புக்கொடி காட்டிய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் தரப்புக்குமிடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.   முன்னதாக கடந்த வியாழக்கிழமை(ஜன.25) நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரையை வெறும் இரண்டே நிமிடத்தில் முடித்துவிட்டு ஆளுநர் வெளியேறினார்.

இந்நிலையில், கேரளத்தின் கொட்டாரக்கரா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்தபோது,  கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியில் சாலையோரம்  திரண்ட  ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் பிரிவான எஸ்எஃப்ஐ உறுப்பினர்கள், ஆளுநர் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டினர்.

Advertisement

வழிநெடுகிலும் கருப்புக்கொடி காட்டியதைப் பார்த்துவிட்டு ஆத்திரமடைந்த ஆளுநர், தனது காரை நிறுத்தச்சொல்லி உடனடியாக காரைவிட்டு கீழே இறங்கி தர்ணாவில் ஈடுபட்டார். அப்பகுதியில் சாலையோர கடையில் இருந்த ஒரு நாற்காலியை எடுத்து அதில் அமர்ந்து கொண்ட அவர், கருப்புக்கொடி காட்டிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்த காவல்துறையினர், ஆளுநரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். எனினும், கருப்புக்கொடி காட்டிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் திரண்டதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.