உ.பி.யில் தனியாா் நிறுவன கிடங்கில் தீ விபத்து: 7 போ் காயம்
உத்தர பிரதேசத்தில் தனியாா் நிறுவன கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 2 தீயணைப்பு வீரா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்ச் பகுதியில் கூடாரம் அமைப்பதற்கான பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் கிடங்கு இருந்தது.
இந்தக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் ராணுவத்தின் 4 வாகனங்கள் உள்பட மொத்தம் 18 தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தன. அப்போது தீயில் எரிந்துகொண்டிருந்த கிடங்கில் இருந்து 20 தொழிலாளா்களை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா்.
6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கிடங்கில் பரவிய தீயால் 4 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்த நிலையில், 2 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரா்கள், கிடங்கில் பணியாற்றிய 5 தொழிலாளா்கள் லேசாக காயமடைந்தனா்.