முகப்பு
இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: கைதானவர்களுக்கு மொட்டையடித்த காவல்துறை!

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு..

Updated On : 12 மார்ச் 2025, 11:35 am IST
வன்முறையில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி விடியோ | காவல்துறையால் மொட்டையடிக்கப்பட்டவர்கள்
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதனால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கொண்டாட்டம் ஒரு படி மேலே சென்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தேவாஸ் மாவட்டத்தில் வன்முறையாக மாறியது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி அம்பேத்கர் நகர் - மோவ் நகரில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 4 பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினரும் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இரவு 10.45 மணியளவில் ஜாமா மசூதி அருகே பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் இரவு நேர தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

அந்தக் கும்பல் கற்களை வீசியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியிலிருந்த பல வாகனங்களுக்கும் தீவைத்தனர். அதைத் தொடர்ந்து, ஜாமா மசூதி பகுதியை ஒட்டிய பட்டி பஜார், மார்க்கெட் சௌக், மனக் சௌக், சப்ஜி மார்க்கெட், கஃபர் ஹோட்டல் மற்றும் கன்னாட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வாகங்களையும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

சாயாஜி கேட் அருகே காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் சிங் குர்ஜார் தலைமையிலான காவல்துறையினர், சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிப்பதைத் தடுக்க முயன்றபோது வன்முறை ஏற்பட்டது.

இளைஞர்கள் அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொள்வதையும், சிலர் காவல்துறை வாகனத்தைத் துரத்திச் சென்று அதன் மீது கற்களை வீசுவதையும் கண்காணிப்பு கேமராக் காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 10 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் மாலை, அவர்களில் சிலர் காவல் நிலையத்திலிருந்து சாயாஜி கேட் வரை வலுக்கட்டாயமாக தலையை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கிரிக்கெட்டில் கொண்டாட்டத்தில் தொடங்கி வன்முறையில் முடிந்த சம்பவத்தில் இளைஞர்கள் மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.