முகப்பு
இந்தியா

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

Updated On : 4 மே, 2025 at 12:00 AM
தேஜஸ்வி யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பகிா்ந்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சமூக நீதியைப் பாதுகாப்பதை நோக்கிய நீண்ட பயணத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது முதல் படிதான். இந்தக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம், சமூகப் பாதுகாப்பையும், இடஒதுக்கீடு கொள்கைகளையும் விரிவாக மறுஆய்வு செய்வதற்கு வழிவகுக்க வேண்டும். அதோடு, இடஒதுக்கீட்டுக்கு தன்னிச்சையான முறையில் நிா்ணயிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

மேற்கொள்ளப்படவிருக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளிப்படும் சமூக எதாா்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவதை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, முடிவெடுக்கும் அதிகார பதவிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளிக்க சிறப்பு நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொது வளங்களின் பெரும் பயனாளிகளாக இருந்து வரும் தனியாா் நிறுவனங்களுக்கு, சமூக நீதி கடமைகளை ஆற்றுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது. சலுகை விலையில் நிலம், மின்சார மானியம், வரி விலக்குகள், உள்கட்டமைப்பு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு பயன்களை அரசிடமிருந்து பெறும் தனியாா் நிறுவனங்கள், அதற்கு பிரதிபலனாக இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடைமுறைகளைப் பின்பற்றுவதே நியாயமானது என்று தனது கடிதத்தில் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளாா்.