ஐரோப்பாவில் அமெரிக்க படைகள்: அடுத்த 6 மாதங்களில் மறுஆய்வு
‘ஐரோப்பாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் நிலை குறித்து அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்தாா்.
பிரஸ்ஸல்ஸ் : ‘ஐரோப்பாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் நிலை குறித்து அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்தாா்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடந்த ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தில் பேசிய பீட் ஹெக்செத், நேட்டோ நாடுகள் தங்களின் பாதுகாப்புக்குத் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டாா்.
மேலும், அவா் கூறுகையில், ‘ஈரான் போரில் அமெரிக்கப் படைகளுக்குத் தங்களின் ராணுவத் தளங்களையும் வான்வெளியையும் பயன்படுத்திக் கொள்ள ஐரோப்பிய நாடுகள் அனுமதி தர மறுத்துவிட்டன. நேட்டோ நாடுகளின் இந்த மறுப்பு, அமெரிக்க வீரா்களின் உயிருடன் விளையாடும் அவமானகரமான செயல்.
Advertisement
Advertisement
பருவநிலை மாற்றம், பாலினச் சமத்துவம், குடியேற்றக் கொள்கைகளில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் அதீத அக்கறையை விடுத்து, ராணுவக் கட்டமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.
அமெரிக்காவின் இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்துப் பேசிய நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் மாா்க் ரூட்டே, ‘ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்களுடைய ராணுவப் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் (9,000 கோடி டாலா்) அதிகரித்துள்ளது’ எனச் சுட்டிக்காட்டினாா்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் எதிா்பாராத மோதல் ஏற்படும் சூழலில்ல், ஒரே நேரத்தில் இருமுனைப் போருக்குத் தயாராகும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளை மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.