அரசின் திட்டங்களால் பலனடையும் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்கு செலுத்துவது இல்லை: மத்திய அமைச்சர்
இந்த நாமக் ஹராம்ஸ்(நன்றி கெட்டவர்கள்) வாக்குகள் எனக்கு தேவையே இல்லை - மத்திய அமைச்சர்
அரசின் திட்டங்களால் பலனடையும் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்கு செலுத்துவது இல்லை என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகாா் பேரவைக்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, பிகாரின் அர்வால் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை(அக். 18) மக்களிடையே பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், “இஸ்லாமிய நபர்கள் சிலரிடம் ஒருமுறை நான் உரையாடியபோது, அவர்களிடம் ‘நீங்கள் ஆயுஷ்மான் அட்டை பெற்றிருக்கிறீர்களா?’ என்று வினவினேன். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து ஆம் என்ற பதில் வந்தது.
‘ஹிந்து - முஸ்லிம் மோதல் பிரச்னைகள் இப்போது எழுந்துள்ளனவா?’ என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து இல்லை என்ற பதில் வந்தது.
அதனைத்தொடர்ந்து, ‘எனக்கு நீங்கள் வாக்கு செலுத்தினீர்களா?’ என்ற கேள்விக்கு அவர்களும் ஆம் என்றனர். ‘கடவுள் சத்தியமாக எனக்கா வாக்கு செலுத்தினீர்கள்?’ என்ற துருவிக்கேட்டபோது அவர்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டனர்.
‘சரி, நரேந்திர மோடிக்காவது வாக்குகளைச் செலுத்தினீர்களா?’ என்றபோதும் அவர்களிடம் அதே இல்லை என்ற பதிலே வந்த்து.
உடனே அவர்களிடம், ‘உங்களை நாங்கள் துன்புறுத்துகிறோமா?’ என்ற கேள்வியை எழுப்பினேன். அவர்கள் அதற்கு இல்லை என்றனர். அப்படியென்றால் என் மீது என்னதான் தவறு உள்ளது? இந்த நாமக் ஹராம்ஸ்(நன்றி கெட்டவர்கள்) வாக்குகள் எனக்கு தேவையே இல்லை.
வறுமையை நீக்குவோம் என்று காங்கிரஸும் லாலு பிரசாத் யாதவும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால், பிரதமர் மோடி செய்து காட்டினார். ஆகவே, நீங்கள் இதைக் குறித்து யோசிக்க வேண்டும்” என்றார்.