பல்கலை. வேந்தர்: முந்தைய அரசின் முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை! அமைச்சர் விஸ்வநாதன்
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியது பற்றி...
பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதா?' என்ற கேள்விக்கு,
"எங்களுடைய அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதல்வர் எடுப்பார். கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. எங்களுடைய புதிய அரசு அமைந்தபிறகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், உயர்கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலை முதல்வர் விஜய் நெறிமுறைப்படுத்துவார். முதல்வரின் வழிகாட்டுதலின்படி விரைவில் உங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும்" என்று கூறினார்.
Advertisement
Advertisement
இந்தியாவில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருந்து வந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு எதிராக முந்தைய திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு 'முதல்வரே வேந்தராக இருக்கலாம்' என்ற தீர்ப்பைப் பெற்றது.
மாநில உரிமையை முந்தைய திமுக அரசு போராடி பெற்ற நிலையில் தற்போதைய தவெக அமைச்சர் விஸ்வநாதன் இவ்வாறு கூறியுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், "பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை” என உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். உயர்கல்வித் துறை அமைச்சர், இதை முதல்வரின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
University Chancellor: No Need to Follow Previous Govt Procedures: TVK Minister Viswanathan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.