லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!
லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலியாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
லடாக்கில் மாநில அந்துஸ்து கோரி போராட்டம் நடத்தப்பட்டதன் எதிரொலியாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, எல்ஏபி அமைப்பின் ‘ஜென் ஸீ’ இளைஞர் பிரிவினர் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனிடையே, லே நிா்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த தடை உத்தரவை மீறி என்டிஎஸ் நினைவு திடலில் புதன்கிழமை காலையில் கூடிய எல்ஏபி அமைப்பினர் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியை நடத்தி, பாஜக தலைமை அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, அந்த அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு சார்பில் ‘ஜென் ஸீ’ இளைஞர்களால் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக வெடித்தது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், லடாக்கின் லே மற்றும் கார்கில் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும் மேல் ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் வன்முறை ஏற்படாமல் இருக்க ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்குள்ள தெருக்களில் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் லடாக்
மாநில அந்தஸ்து கோரி லடாக் பிரதிநிதிகள் இந்திய அதிகாரிகளுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. மேலும், மற்றொரு சந்திப்பு அக்.6 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே போராட்டம் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது.
லடாக்கில் வசிப்பவர்களில் ஏறக்குறைய பாதி பேர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் முக்கால்வாசி பேர் முக்கியமாக கார்கில் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அதே நேரத்தில் சுமார் 40 சதவிகிதம் பேர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் லே மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
லடாக்கின் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமங்கள் எல்லை ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இதுஒருபுறமிருக்க வெள்ளம் , நிலச்சரிவுகள் மற்றும் வறட்சி உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரடுமுரடான மலைப்பாங்கான இந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் உருகி, லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் விநியோகம் அதிகமாக பாதித்து மக்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian authorities impose security restrictions in remote Ladakh after deadly clashes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.