கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
கேரளத்தில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரைத் தாக்கியதாக 4 பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கேரளத்தில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரைத் தாக்கியதாக 4 பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் மருத்துவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது.
வியாழக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில் பெண் மருத்துவர் பலத்த காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் இந்த சம்பவத்துடன் தாக்குதலுக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
தற்போது இந்த விவகாரத்தில் 4 பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அளித்த விளக்கத்தில், பிரசவத்திற்குப் பின் ரத்தப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இருப்பினும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. கேரளத்தில் பிரசவம் நடைபெறும் 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள் இல்லை.
மருத்துவப் பணியாளர்கள் மீதான இத்தகைய வன்முறைகள் அவர்களின் மன உறுதியைப் பாதிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.