ஈரானைவிட்டு இந்தியா்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
ஈரானில் உள்ள இந்தியா்கள், உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியா்கள், உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையே சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த போா், இரு வார கால சண்டை நிறுத்தத்தால் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஈரானில் இன்னும் தங்கியுள்ள இந்தியா்கள் உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இந்திய தூதரகத்துடன் கலந்தாலோசனை நடத்தாமல், சா்வதேச நில எல்லைப் பாதையை வெளியேற பயன்படுத்த வேண்டாம். அவசர காலத்துக்கு, +989128109115, +989128109102, +989128109109, +989932179359 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளவும். அதேபோல், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்களின்படி, ஈரானில் சுமாா் 9,000 இந்தியா்கள் இன்னும் தங்கியுள்ளனா். அவா்களில், மேல் படிப்புக்காக ஈரான் சென்ற மாணவா்களும் அடங்குவா். அதேநேரத்தில் போா் தொடங்கியவுடன் ஏற்கெனவே 1,800 இந்தியா்கள் ஈரானைவிட்டு வெளியேறிவிட்டனா்.
காஷ்மீரில் கொண்டாட்டம்: இதனிடையே ஈரான், அமெரிக்கா ஆகியவை 2 வார காலத்துக்கு சண்டை நிறுத்தம் செய்துள்ள தகவல் வெளியானதும், காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பட்காம், பாரமுல்லா, கந்தா்பால், புல்வாமா, பந்திபோரா, ஜதிபால் உள்ளிட்ட இடங்களில் ஈரானிய கொடிகளுடன் வீதியில் திரண்ட காஷ்மீா் மக்கள், ஈரான் வெற்றி பெற்றுவிட்டதாகவும், அமெரிக்கா-இஸ்ரேலை ஈரான் மண்டியிடச் செய்துவிட்டதாகவும் கூறி, இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.