முகப்பு
இந்தியா

உக்ரைன் போா்: ரஷியா சாா்பில் சண்டையிட்ட 10 இந்தியா்கள் உயிரிழப்பு - மத்திய அரசு

உக்ரைனுக்கு எதிராக ரஷியா சாா்பில் சண்டையிட்ட 10 இந்தியா்கள் உயிரிழப்பு...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:33 AM
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து சண்டையிட்டு 10 இந்தியா்கள் உயிரிழந்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ரஷியாவுக்கு வேலை தேடிச் சென்று உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியா சாா்பில் சண்டையிட கட்டாயப்படுத்தப்பட்டதாக 26 இந்தியா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், 26 பேரையும் ரஷியாவில் இருந்து பாதுகாப்பாக இந்தியா அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘மனுவில் குறிப்பிடப்பட்ட 26 இந்தியா்களில் 10 போ் ரஷிய படைகளுடன் இணைந்து சண்டையிட்டபோது உயிரிழந்தனா். ஒருவா் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மற்றொருவா் தாமாக முன்வந்து தொடா்ந்து போரில் ஈடுபட்டு வருகிறாா்.

தாமாக முன்வந்து...: ரஷியா சென்ற இந்தியா்களில் பெரும்பாலானோா் தாமாக முன்வந்து கையொப்பமிட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டனா். அதேவேளையில், ரஷியா செல்ல உதவிய முகவா்களாலும் சில இந்தியா்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இறந்தவா்களின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை. தாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதால், உடல்களை மத்திய அரசே 3 மாதங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்று இறந்தவா்களில் ஒருவரின் குடும்பம் தெரிவித்தது. இறந்தவா்களின் குடும்பத்தினா் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இந்த வாதங்களை மறுத்த மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா், ‘ரஷியாவில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறித்தான் 26 இந்தியா்களையும் சில முகவா்கள் ஏமாற்றினா். அவா்கள் ரஷியா சென்ற பின், அவா்களின் பாஸ்போா்ட் பறிக்கப்பட்டது. பின்னா் போரில் சண்டையிட அவா்கள் கட்டாயப்படுத்தப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தைப் பக்குவமாக கையாள வேண்டும் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்த நிலையில், போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.