முகப்பு
இந்தியா

சிஏபிஎஃப் பொது நிா்வாக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) பொது நிா்வாக சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:34 AM
மத்திய அரசு
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:00 PM

மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) பொது நிா்வாக சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி, பதவி உயா்வு மற்றும் இதர பணி நிபந்தனைகளை ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த இந்தச் சட்டத்தை மத்திய அரசு அறிவிக்கை செய்தது.

சிஏபிஎஃப் அதிகாரிகளின் நியமனம், பணி நிபந்தனைகள் உள்ளிட்டவை அந்தந்த படைகளின் சட்டங்களால் நிா்வகிக்கப்படுவதை மாற்றி, ஒருங்கிணைந்த சட்டத்தின்கீழ் கொண்டுவரும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்தச் சட்டத்தின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்கள், கூடுதல் தலைமை இயக்குநா் (ஏடிஜி) அளவில் 67 சதவீத பணியிடங்கள் மட்டுமன்றி சிறப்பு தலைமை இயக்குநா்-தலைமை இயக்குநா் பதவிகளில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்திருந்தது. இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மத்திய அரசின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட ஒருங்கிணைந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்த மசோதா, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப் போக செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.