முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.50 கோடியுடன் 2-வது இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை குடியரசுத் தலைவா் ஒப்புதல்!

புதுச்சேரியில் ரூ.50 கோடியில் 2-ஆவது இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை அமைக்க குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

Updated On : 23 மே 2026, 12:25 am IST
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பகிர்:

புதுச்சேரியில் ரூ.50 கோடியில் 2-ஆவது இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை அமைக்க குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது குறித்து புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியின் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு, துணைநிலை ஆளுநரின் முன் அனுமதியுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2-வது இந்திய ரிசா்வ் பட்டாலியனை அமைப்பதற்கான அனுமதி கோரி, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் 20-ம் தேதி இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான திட்ட முன்மொழிவை சமா்ப்பித்தது. இந்த முன்மொழிவு இந்திய அரசால் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், குடியரசுத் தலைவா் ஒப்புதல், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மே 15-ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், 2-ஆவது இந்திய ரிசா்வ் பட்டாலியனை நிறுவுவதற்காக ஒருமுறை நிதியுதவி ரூ.50 கோடி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பட்டாலியனுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடப்படும் ரூ.30 கோடி வரை, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு, இந்திய அரசால் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2-வது இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை உருவாக்கப்படுவதன் மூலம், பல்வேறு நிலைகளில் சுமாா் 1,007 புதிய பணியிடங்கள் உருவாகும். இந்த புதிய பணியிடங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காவல் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூா் இளைஞா்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.