வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என யோகி ஆதித்யநாத் பேசியது குறித்து...
வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு வங்க பிரசாரத்தில் இன்று (ஏப். 12) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பூர்பா மெதினிபூரில் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப். 12) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Advertisement
பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
''ராமருடன் தொடர்புடைய புனிதமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து, தேசிய கீதமும் தேசிய பாடலும் உள்ள மேற்கு வங்க மண்ணிற்கு வந்துள்ளேன். மேற்கு வங்கத்தின் வரலாறும் கலாசாரமும் நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.
சுவாமி விவேகானந்தர், ராம் போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்பட இந்த மண்ணுடன் தொடர்புடைய பலர் இந்தியாவின் தேசிய உணர்வைத் தொடர்ந்து ஊக்குவித்தனர்.
ஒரு தேசத்தில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று ஷியாமா பிரகாஷ் முகர்ஜி தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கனவு பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் நனவாகி வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கு வங்கம் தொடர்ந்து சிதைந்து வருகிறது. ரவிந்திரநாத் தாகூர் உள்பட பல அறிவியல் அறிஞர்களையும் முக்கிய ஆளுமைகளையும் இந்த மண் வழங்கியுள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி அட்டூழியங்கள் நிறைந்த மண்ணாக இதனை மாற்றியுள்ளது.
ஊடுருவியவர்களைத் தங்கள் வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக்கொள்வதற்காகவே, திரிணமூல் அரசாங்கம் எல்லையில் வேலி அமைப்பதை அனுமதிக்கவில்லை.
நாட்டையே உலுக்கிய ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் மமதா அமைதி காக்கிறார். ஏனெனில், அதில் தொடர்புடைய குண்டர்கள் மமதாவுக்கு வேண்டியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.