உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி!
உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி...
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரணியில் கலந்துகொண்டார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்தனர்.
தொகுதி மறுவரையறை மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற போதிலும் அம்மாநில எதிர்க்கட்சியான சமாஜவாதி, முஸ்லிம், ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக்கீடு இல்லாததால் எதிர்த்து வாக்களித்தது.
Advertisement
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், லக்னெளவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியின்போது பேசிய யோகி ஆதித்யநாத், “பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த பேரணி, மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவுள்ள காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும், நாட்டின் சரிபாதி மக்களிடையே நிலவும் சீற்றத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளின் சித்தாந்தமும் செயல்பாடுகளும் பெண்களுக்கு எதிரானவையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான தங்கள் நற்பெயரைச் திருத்திக்கொள்வதற்காகப் பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை, அவர்கள் முறையற்ற வகையில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.” என்றார்.