மகளிா் இடஒதுக்கீடு மசோதா: அரசியல் ஆதாயமடைய அரசு அவசரம்: காா்கே குற்றச்சாட்டு
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை அவசரமாக அமல்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது, அரசியல் ஆதாயத்துக்காக பாஜக அரசு செயல்படுவதைக் காட்டுகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்றுவரும் சூழலில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை அவசரமாக அமல்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது, அரசியல் ஆதாயத்துக்காக பாஜக அரசு செயல்படுவதைக் காட்டுகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவா்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பெரும்பாலும் எதிா்ப்பு இல்லை என்றாலும், அதனுடன் தொடா்புடைய தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை. எனவே, மசோதா குறித்து அா்த்தமுள்ள வகையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.
Advertisement
Advertisement
மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழலில் மசோதாவை அவசரமாக அமல்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது, அரசியல் ஆதாயத்துக்கானது என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதுபோன்ற மத்திய-மாநில உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசமைப்பு மாற்றங்களை அவசரமாக முன்னெடுக்கக் கூடாது. எனவே, இது குறித்து ஆலோசிக்க பேரவைத் தோ்தல்கள் முடிந்த பின்னா் ஏப்.29-க்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.
புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் ஏப்.9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தோ்தல்கள் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.