பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பிகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறித்து...
பிகாரில் புதிதாகப் பதவியேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி புதன்கிழமை (ஏப்.15) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிகாரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்த மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
Advertisement
இதனையடுத்து பிகாரின் துணை முதல்வராக இருந்த சாம்ராட் செளதரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். அதேபோல, துணை முதல்வர்களாக விஜய் குமார் சௌதரி மற்றும் பிஜேந்திர பிரசாத் இருவரும் பதவியேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிகாரின் முதல்வராகப் பொறுப்பேற்ற சாம்ராட் சௌதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பொது சேவையில் அவருக்கு உள்ள ஆற்றலும், அர்ப்பணிப்பும் மற்றும் அடிமட்ட அளவில் உள்ள அனுபவமும் மாநிலத்துக்குப் பயனுள்ள வகையில் அமையும். அவர் மிகவும் திறமையுள்ள தலைவர் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அதேவேளையில், மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் புதிய உச்சத்தைத் தொடும் அளவுக்கு வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வார்” எனத் தெரிவித்தார்.
அதேபோல மற்றொரு பதிவில், “துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்ற விஜய் குமார் சௌதரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அவர்களின் கள அனுபவமும், பொது சேவைக்கான அர்ப்பணிப்பும் பிகாரின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்.
இதனுடன், மாநிலம் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுநலனில் புதிய நிலைகளை அடையும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.