மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மீதான எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மீதான எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, "மக்களவையில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சிகள் அனுமதிக்கவில்லை.
பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் தோல்வியைக் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது.
Advertisement
இப்போது, பெண்களுக்கு அவைகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்காது. காங்கிரஸும் அதன் கூட்டணிகளும்தான் இதனைச் செய்துள்ளனர். இது முதல்முறை அல்ல; மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்கின்றனர்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மனநிலையானது, பெண்களின் நலனுக்கானதோ நாட்டின் நலனுக்கானதோ அல்ல" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தின்போது அமித் ஷா பேசுகையில், "தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழகத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்கள் மகளிருக்கானதாக இருக்கும். தென் மாநிலங்களுக்கான பங்கீடு குறையாது என நான் உறுதியளிக்கிறேன். உங்களால் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். ஆனால், அதனை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சதவிகிதம் குறையாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என கையெழுத்திட்டு தருகிறேன்.
தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க நான் தயாராக இருக்கிறேன், இன்ற இந்த மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.