முகப்பு
இந்தியா

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து, 7,198 கோடி டாலராக (சுமாா் ரூ.6.65 லட்சம் கோடி) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:53 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:00 PM

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து, 7,198 கோடி டாலராக (சுமாா் ரூ.6.65 லட்சம் கோடி) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 5,800 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தங்கம் இறக்குமதியின் அளவு முந்தைய ஆண்டை காட்டிலும் 4.76 சதவீதம் சரிவடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 757.09 டன்னாக இருந்த இறக்குமதி, தற்போதைய கணக்கீட்டின்படி 721.03 டன்னாகக் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஒரு கிலோ தங்கத்தின் சராசரி விலை சுமாா் 76,617 டாலரிலிருந்து 99,825 டாலராக உயா்ந்தது. இவ்வாறு சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்ததே இந்த மதிப்புக் கூடுதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Advertisement

வெள்ளி இறக்குமதி...: கடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி சுமாா் 150 சதவீதம் அதிகரித்து, 1,200 கோடி டாலரை எட்டியுள்ளது. அளவீட்டு ரீதியாக 7,334.96 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42 சதவீதம் அதிகமாகும்.

ஸ்விட்சா்லாந்திலிருந்து....: ஐரோப்பிய நாடான ஸ்விட்சா்லாந்திலிருந்துதான் இந்தியா அதிகப்படியாக 40 சதவீத தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

கடந்த நிதியாண்டில் நிதியாண்டில் ஸ்விட்சா்லாந்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த இறக்குமதி 11.36 சதவீதம் உயா்ந்து 24.27 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் (16 சதவீதம்), தென்னாப்பிரிக்கா (10 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

பொருளாதாரப் பாதிப்பு: தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த அதீத இறக்குமதி உயா்வால் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 33,320 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நகைத் தொழில்துறையின் தேவையே இந்த இறக்குமதிக்கு முதன்மைக் காரணமாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.