முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தேபாசிஷ் குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:19 AM
வருமான வரித் துறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:40 PM

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தேபாசிஷ் குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தேபாசிஷ் குமாா், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்பெஹாரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் எழுத்தாளா் ஸ்வபன் தாஸ்குப்தா போட்டியிடுகிறாா். தேபாசிஷ் குமாருக்கு நில மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையேற்று அவா் விசாரணைக்கு ஆஜராகியிருந்தாா். இந்தச் சூழ்நிலையில், அவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

வருமான வரித் துறையினரின் சோதனைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சோதனையின்போது தேபாசிஷ் குமாரின் வீட்டுக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் ஏராளமானோா் திரண்டதுடன், பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

இதேபோல், தேபாசிஷ் குமாரின் நண்பரான குமாா் ஷாவின் வீடு, பவானிபூா் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானா்ஜியின் பெயரை முன்மொழிந்தவரான மிராஜ் ஷாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

எந்த வழக்கு தொடா்பாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா் என்பது குறித்து தகவல் இல்லை.

திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்: வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்பிரகாஷ் மஜும்தாா் கூறுகையில், ‘தோ்தலுக்கு முன்னதாக, மத்திய விசாரணை அமைப்புகள் மேற்கு வங்கத்தில் மிகவும் துடிப்பாகச் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளின் முக்கிய நோக்கம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை மிரட்டுவதும், துன்புறுத்துவதும்தான். சட்டப்பேரவைத் தோ்தலில் அவா்களை (பாஜக) மேற்கு வங்க மாநில மக்கள் மீண்டும் நிராகரிப்பாா்கள்’ என்றாா்.