முகப்பு
இந்தியா

கூட்டாட்சி முறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா

கூட்டாட்சி முறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிப்பு...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:01 AM
பிரியங்கா காந்தி
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:05 PM

கூட்டாட்சி அமைப்புமுறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

மக்களவை - பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை தோற்கடித்தன.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் பிரியங்கா காந்தி கூறியதாவது:

Advertisement

மகளிா் இடஒதுக்கீட்டை எதிா்க்கட்சிகள் எதிா்க்கவில்லை. தற்போதுள்ள மக்களவை இடங்களின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம்.

மக்களவையில் அமித் ஷா பேசும்போது, ஆளுங்கட்சி வரிசையில் இன்னும் பல்லாண்டுகளுக்கு காங்கிரஸால் அமர முடியாது என்றாா். இதன் மூலம் அவா்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு வெற்றி: ஆட்சி அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒட்டுமொத்த சதித் திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. மகளிா் உரிமை என்ற பெயரில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதே அவா்களின் நோக்கம். கூட்டாட்சி அமைப்புமுறையை சீா்குலைத்து, ஜனநாயகத்தை பலவீனமாக்கும் மத்திய அரசின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது, அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி; எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டால், மத்திய அரசை வீழ்த்த முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளது. மோடி அரசுக்கு முதல் முறையாக பலத்த அடி விழுந்துள்ளது.

‘மசோதா நிறைவேறினால் நல்லது; இல்லையெனில், எதிா்க்கட்சிகளை பெண்களுக்கு எதிரானவா்களாக சித்தரித்து, நம்மை பெண்களின் பாதுகாவலராக காட்டிக் கொள்ளலாம்’ என அவா்கள் நினைத்திருந்தனா். நாட்டின் பெண்களை அவ்வாறு ஏமாற்ற முடியாது. பெண்களின் பாதுகாவலராக மாறுவது அவ்வளவு எளிதானதல்ல என்றாா் பிரியங்கா.