மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி
தொகுதி மறுவரையறை மசோதாவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் அரசின் சதி என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
தொகுதி மறுவரையறை மசோதாவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் அரசின் சதி என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியதாவது, "நேற்று நடந்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கூட்டாட்சியின் கட்டமைப்பைக் குலைப்பதற்கும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட அரசின் சதி தோற்கடிக்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
எப்படியாவது அவர்கள் ஆட்சியில் இருந்துவிட வேண்டும் என்பது ஒரு சதியாக நான் பார்க்கிறேன். அதற்காக, பெண்களைப் பயன்படுத்தி, நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள். மசோதா நிறைவேற்றப்பட்டால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்தார்கள். நிறைவேற்றப்படாவிட்டால், மற்ற கட்சிகளை பெண்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி, பெண்களுக்கு பாதுகாவலரைப்போல அவர்கள் மாற முயன்றனர். இது அவர்களுக்கு ஒரு கறுப்பு நாள்.
Advertisement
சமீபத்திய காலத்தில், பெண்களின் பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. போராட்டம் அதிகரித்து வருகிறது. பெண்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
நீங்கள் உறுதியான ஏதாவது செய்ய விரும்பினால், 2023-ல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரித்து மீண்டும் கொண்டு வாருங்கள். அதில் சில சிறிய திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்றால், அதை இபோது செயல்படுத்தலாம்.
பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை இப்போதே வழங்குங்கள். அதனைத் திரித்து, மற்ற விஷயங்களுடன் இணைத்து தவறாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம்.
முதலாவதாக, அவர்கள் நிறைய சர்வதேச அழுத்தத்தின்கீழ் உள்ளனர். அவர்களின் மீதான அழுத்தத்தால், எரிவாயு, பழங்கள், காய்கறிகள், அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அரசியல் நற்பெயரை மட்டுமே விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.