பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி பிரியங்கா காந்தி கருத்து...
மோடி அரசு ஏற்கெனவே நிறைவேற்றிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள், நிறைவேற்றித் தருகிறோம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் ஏப். 16 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று முழுவதும் விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் 3 மசோதாக்களும் தோல்வியடைந்தன.
Advertisement
இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,
"அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட அந்த பழைய 'மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை' மோடி அரசு உடனடியாக, வரும் திங்கள்கிழமை கொண்டு வரட்டும். அப்படி கொண்டுவந்தால் அப்போது யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதைப் பார்த்துவிடலாம். நாங்கள் அனைவரும் அந்த மசோதாவுக்கு வாக்களித்து ஆதரவளிப்போம்.
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாத்ததை நாங்கள் கொண்டாடினோம். தொகுதி மறுவரையறை கொண்டுவருவதற்கான அவர்களின் சதியை நாங்கள் முறியடித்தோம். பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பொருத்தவரை, நாங்கள் எப்போதும் ஆதரவாகவே இருப்போம். ஆனால் அவர்கள் இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளவிதம் காரணமாக நாங்கள் இதற்கு ஆதரவளிக்கவில்லை" என்று கூறினார்.