எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி
2029 தேர்தல் வெற்றிக்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பயன்படுத்தும் அரசு: பிரியங்கா காந்தி
புது தில்லி : எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம் என்பதற்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை(ஏப். 17) மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்த சம்பவம் உதாரணமாகிவிட்டது என்று காங்கிரஸ் பொதுச்செயலரும் மக்களவை எம். பி. யுமான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
புது தில்லியில் சனிக்கிழமை(ஏப். 18) செய்தியாளர்களுடனான சந்திப்பில் பிரியங்கா காந்தி பேசியதாவது :
“நேற்று (ஏப். 17) நடந்தது, ஜனநாயகத்துக்கான குறிப்பிடத்தக்கதொரு வெற்றியாகும்.
Advertisement
ஒன்றிய அமைப்பைச் சீர்குலைக்கும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் அரசின் சதி வீழ்த்தப்பட்டது; நிறுத்தப்பட்டது.
இது ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்குமான வெற்றி. ஆளும் தரப்பு தலைவர்களின் முகங்களில் இதைத் தெளிவாக உணர முடிந்தது.
மோடி அரசு முதல் சறுக்கலைச் சந்தித்துள்ளது; இதனையடுத்து அரசு இதனை ‘கறுப்பு நாள்’ என்று அழைக்கிறது. இந்த அடி அவர்களுக்குத் தேவையான ஒன்று.
வெள்ளிக்கிழமை மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று குறிப்பிட்டார். இதன்மூலம், அவர்களின் மனநிலை வெளிப்பட்டுவிட்டது.
ஒட்டுமொத்த சதியும் எதற்காக? அதிகாரத்தில் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும்! அதற்காக. விட்டிருந்தால், அரசு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல மறுவரையறை செய்திருப்பார்கள்.
எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லையென்றால் அவர்களால் ஆட்சிக்கு வரவே முடியாதென பிரதமரும் உள்துறை அமைச்சரும் வாதிடுகின்றனர். இந்த வாதங்கள் முலம், அரசின் எண்ணம் என்ன? என்பது தெளிவாகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அவர்களது வெற்றியாக இருந்திருக்கும். மசோதா நிறைவேற்றப்படாதிருந்தால் அதனை மகளிருக்கெதிரானதாக அவர்கள் முத்திரையிட்டிருப்பார்கள்.
இதனைச் செய்து அதன்மூலம், தங்களைப் பெண்களின் மேசையாவாக நிரூபிக்க பாஜக விரும்பியது.பெண்களின் மேசையாவாக மாறுவது அவ்வளவு எளிதல்ல.
ஹத்ராஸில் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனைகளுக்கும் பிறருக்கும் என்ன நடந்தது என்பதையும் பார்த்தோம்.
எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நிகழ்வின் மூலம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அரசை வீழ்த்த முடியும் என்பது வெளிப்பட்டுள்ளது” என்றார்.