மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! ராகுல் வீட்டின் அருகே பாஜக மகளிரணி போராட்டம்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியையடுத்து, ராகுல் காந்தி வீட்டின் முன்பாக பாஜக பெண் உறுப்பினர்கள் போராட்டம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன்பாக பாஜக பெண் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே ஆதரவாகப் பெறப்பட்டன. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டது.
இந்த மசோதா தோல்வியால், பெண்களின் உரிமைகளை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என பாஜக மகளிரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், தில்லியில் சுனேஹ்ரி பாக் பகுதியில் அமைந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் அருகே பாஜக எம்.பி.க்கள் உள்பட பெண் நிர்வாகிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே, பாஜக எம்.பி.க்களான ஹேமமாலினி, கமல்ஜீத் செஹ்ராவத், பன்சூரி ஸ்வராஜ், மஞ்சு சர்மா, வாத்ஸல்யா குப்தா, மனோஜ் திவாரி உள்ளிட்ட போராட்டக்காரர்கள், ராகுலின் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்த முற்பட்டனர்.
மேலும், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் பேசுகையில், "இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள். பெண்களின் சக்தி மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு உரிமைகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்பது தெரிகிறது" என்று தெரிவித்தனர்.
இருப்பினும், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக தண்ணீர் பீய்ச்சிய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.