ஊழல் பாஜக ஆட்சியில் 22 லட்சம் மாணவர்களின் கடின உழைப்பு வீண்! ராகுல் காந்தி
நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு ராகுல் கண்டனம்...
நீட் தேர்வெழுதிய 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கடின உழைப்பும், கனவுகளும் இந்த ஊழல் நிறைந்த பாஜக ஆட்சியால் நசுக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
“நீட் - 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் கனவுகள் இந்த ஊழல் நிறைந்த பாஜக ஆட்சியால் நசுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வை எழுத சிலரின் தந்தைகள் கடன் வாங்கினர், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை விற்றனர். லட்சக்கணக்கான குழந்தைகள் இரவு முழுவதும் கண்விழித்துப் படித்தனர்.
இதற்குப் பதிலாக, அவர்களுக்குக் கிடைத்தது வினாத்தாள் கசிவுகள், அரசின் அலட்சியம் மற்றும் கல்வியில் திட்டமிட்ட ஊழல்.
இது வெறும் தோல்வி மட்டுமல்ல, இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு எதிரான ஒரு குற்றம்.
ஒவ்வொரு முறையும், வினாத்தாள் மாஃபியா எந்தத் தண்டனையுமின்றித் தப்பிவிடுகிறது, ஆனால் நேர்மையாக தேர்வெழுதும் மாணவர்கள் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
இப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் மீண்டும் அதே மன அழுத்தம், நிதிச் சுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையைச் சகித்துக் கொள்ளப் போகிறார்கள்.
ஒருவரின் தலைவிதி கடின உழைப்பால் இல்லாமல், பணத்தாலும் தொடர்புகளாலும் தீர்மானிக்கப்பட்டால், கல்விக்கு என்ன மதிப்பு இருக்கும்?
பிரதமரின் பொற்கால ஆட்சி என்றழைக்கப்படுகிறது. அது நாட்டுக்கு ஒரு விஷக் காலமாக மாறியுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.