மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் பேச்சை ராகுல் காந்தி விமர்சித்திருப்பது பற்றி...
நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம், வீட்டிலிருந்து பணிபுரியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது தோல்விக்கான சான்றுகள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி நேற்று வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். கரோனா காலத்தைப் போன்று காணொலி கூட்டங்கள், வீட்டிலிருந்து பணிபுரிவது போன்றவற்றை தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
Advertisement
இதனை விமர்சித்து ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பிரதமர் மோடி நேற்று மக்களை தியாகம் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாட்டுக்கு போகாதீர்கள், பெட்ரோல் குறைவாக பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோவில் செல்லுங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என்றார்.
இதெல்லாம் அவரின் உபதேசங்கள் அல்ல, தோல்விக்கான சான்றுகள்.
12 ஆண்டுகளில், அவர் நாட்டை இப்படியொரு நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். மக்கள் என்ன வாங்க வேண்டும், என்ன வாங்கக்கூடாது, எங்கே போக வேண்டும், எங்கே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அவர்களின் பொறுப்பை மக்கள் மீது சுமத்தி தப்பித்துக்கொள்கிறார். இனி நாட்டை நடத்துவது சமரசமான பிரதமரின் கைகளில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.