மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது மோடிதான்: கார்கே
மகளீர் இடஒதுக்கீடு மசோதா பற்றி கார்கேவின் கருத்து...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது பிரதமர் நரேந்திர மோடிதான் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், கூச் பெஹரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமரை கார்கே மறைமுகமாகச் சாடியுள்ளார்.
Advertisement
2029-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா மக்களவையில் முடங்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் "கருக்கொலை" செய்ததாகப் பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கார்கே, மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவைக் கொன்றது நீங்கள்தான்(மோடி). நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவைத்தான் எதிர்த்துப் போராடினோம், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அல்ல.
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக விரும்புகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். மகளிருக்கான உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதில் காங்கிரஸ் எப்போதும் மிகுந்த அக்கறை செயல்படுவதாக அவர் கூறினார்.
சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்கள் தனது கட்சியின் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்று அவர் கூறினார்.