வந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையிலான மசோதா நிறைவேறியது பற்றி...
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
‘தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவை இடதுசாரி எம்.பி.க்கள் உள்பட எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே கடந்த ஜூலை 24 ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.
தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-இல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக 1971-ஆம் ஆண்டு சட்டம் வகை செய்வதோடு, அந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்கிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் வினாத்தாள் முறைகேடு தடுப்பு மசோதா
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற இந்த மசோதாவை பிரதமா் அலுவலகத்துக்கான இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் மீது கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மசோதா சிறப்பம்சங்கள்
இந்த மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்படும். அதனுடன், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
திட்டமிட்டு தோ்வு முறைகேடு தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகள் தொடா்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அதற்காக, எந்தவொரு அமா்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கு மீது உடனடியாக விசாரணை தொடங்கி தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Insulting Vande Mataram is an offense: Bill passed in Rajya Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.