மக்களவையிலும் நிறைவேறியது வந்தே மாதரம் சட்ட மசோதா!
மக்களவையில் இன்று வந்தே மாதரம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
‘வந்தே மாதரம்’ அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில், வந்தே மாதரம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு இன்று விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத் துரோகிகளா? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
விவாதத்தைத் தொடர்ந்து, மக்களவையிலும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் அந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நேற்று, பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026ஐ விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூா்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.