FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவர்களுக்குத் தேவை நீதிதான், ஒடுக்குமுறை அல்ல... கார்கே சரமாரி கேள்வி!

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் எக்ஸ் பதிவு பற்றி..

Updated On : 21 ஜூலை 2026, 12:28 pm IST
மல்லிகார்ஜுன கார்கே - file photo
பகிர்:

சமூக ஆர்வலர் வாங்சுக்கின் அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியுள்ள சூழலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடப் போவதில்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 84-வது பிறந்தநாள் இது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்..

Advertisement

Advertisement

இன்று கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல: பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்குமான நாள்.

நீட் தேர்வுக்காகக் காலவரையின்றி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கரப்பான்பூச்சி கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுகளையும் நாடு நேற்று கண்டது.

நீதி கோரிய மாணவர்களின் குரல்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக வன்முறையால் ஏவப்பட்டது. ஜனநாயகத்தின் தாய் என்று போற்றப்படும் ஒரு நாடு தனது இளம் பிள்ளைகளை இப்படித்தான் நடத்துமா என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பினார்.

திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு போராட்டத்தைக் குறிப்பிட்டு, இத்தகைய வேதனையான சூழலில், இன்று எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

எனக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது; உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கார்கே கூறினார்.

நீதி கோரிய மாணவர்கள் மீது ஏன் கொடூரமான தடியடியும், கண்ணீர்ப்புகை வீச்சும் நடத்தப்பட்டன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இணையச் சேவை ஏன் துண்டிக்கப்பட்டது? மீண்டும் மீண்டும் நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்தை மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குத் தார்மீக மற்றும் அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

பாதுகாப்பான டிஜிட்டல் வினா வங்கி மற்றும் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்ட, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற மாணவர்-மையத் தேர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் தலையீடு இல்லாத, கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட, சுதந்திரமான மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி முறையை உருவாக்க வேண்டும். தேர்வு முறைகேடுகள் நிகழும்போதெல்லாம், கட்டாய மறுதேர்வுகள் மற்றும் இழப்பீடு வழங்குவதன் மூலம் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

"எங்கள் குழந்தைகளுக்குத் தேவை நீதிதான், ஒடுக்குமுறை அல்ல,"

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை, இளைஞர்களுக்கு எதிராக அரசு இழைத்த அநீதிகளின் பட்டியலில் "அவமானகரமான அத்தியாயம்". அதிகாரத்தில் இருப்பவர்களின் உத்தரவின்பேரில் நாட்டின் இளைஞர்களைத் தாக்கியவர்கள், ஒருநாள் அரசியலமைப்பின் 'தடி' தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் இவ்வாறு கார்கே பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து விவாதிக்கவும் வலியுறுத்தின. இதனால் அவையின் நடவடிக்கைகள் நாள்தோறும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments