நான் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனபோது அமித் ஷா ஒரு சிறுவர்! கார்கே விமர்சனம்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்தது பற்றி...
நான் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனபோது அமித் ஷா ஒரு சிறுவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், வந்தே மாதரம் பாடலை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவமதித்ததாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், அவருக்கு எதிராக பல மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சோனியா காந்தி செய்த இந்த பாவத்தை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
“நான் முதன்முதலில் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றபோது அமித் ஷா ஒரு சிறுவனாக இருந்தார்; ஆனால் இன்றோ அவர் எங்களுக்குத் தேசபக்தியைக் கற்றுக்கொடுக்கிறார்.
பா.ஜ.க.வோ அல்லது அவர்களின் முன்னோர்களோ ஒருபோதும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே, அவர்கள் காங்கிரஸ் கட்சியினருக்குத் தேசபக்தியைப் கற்பிக்கக் கூடாது.
உண்மையில், இந்தியாவுக்கு எதிரான மற்றும் மதத்திற்கு எதிரான சக்தியாக பா.ஜ.க.வே திகழ்கிறது. ஏனெனில், உத்தரகண்டில் நான் ஆற்றிய உரைக்குப் பிறகு, பா.ஜ.க.வினர் அந்த மேடையைச் சுத்திகரிப்பு செய்தனர்.
பா.ஜ.க.வின் குருக்களா அவர்களுக்கு இதைக் கற்றுக்கொடுத்தார்கள்?” என்று பேசினார்.
காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நேற்று சுதந்திர தினவிழாவில் கொடியேற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சைகை செய்தார்.
இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், மல்லிகார்ஜுன கார்கே அமர்வதற்காக இருக்கை அளிக்குமாறு சோனியா காந்தி சைகை காட்டியதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Amit Shah was a child when I first became an MLA: Kharge's criticism.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.