இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம் தெரிவித்தது பற்றி...
புது தில்லி : ஹோர்முஸ் நீரிணை வழியே சென்ற இந்திய வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுவதாக அறிவித்த ஈரான், அமெரிக்க கடற்படையால் ஈரானிய துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் நடவடிக்கைக்கு எதிர்வினையாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய சரக்கு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே, இராக்கிலிருந்து 20 லட்சம் பாரல் எண்ணெயுடன் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த இரு இந்திய சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முகமை ஒன்று உறுதிப்படுத்தியது. தாக்குதல் எதிரொலியாக அவ்விரு இந்தியக் கப்பல்களும் திருப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இது குறித்து கண்டனத்தைப் பதிவு செய்ய வெளியுறவு அமைச்சகம் விடுத்த அழைப்பின்பேரில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியை இன்று (ஏப். 18) மாலை சந்தித்த ஈரான் தூதருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்த்திபின்போது, ஹோர்முஸ் நீரிணையில் இரு இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஈரானிடம் இந்தியா கவலையை வெளிப்படுத்தியதாகவும், கப்பல்களில் செல்லும் வணிகர்கள் மற்றும் மாலுமிகள், பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் பற்றியும் ஈரான் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், ஈரான் தரப்பிலிருந்து ஏற்கெனவே கடந்த காலங்களில் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டதையும் வெளியுறவுச் செயலர் நினைவுகூர்ந்தார். வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த வெளியுறவுச் செயலர், இந்தியாவின் கருத்துகளை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துரைக்க ஈரான் தூதரிடம் வலியுறுத்தியதுடன், ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத்தை விரைந்து அனுமதிக்கவும் வலியுறுத்துமாறு தெரிவித்தார்.