விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல...
விசாரணை நீதிமன்ற நீதிபதிகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக விமா்சிக்கும் போக்கு சரியல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
வாடகைக்கு குடியிருப்பது தொடா்பான குற்ற வழக்கு ஒன்றில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீனை கொல்கத்தா உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் ரத்து செய்தது. அப்போது அந்த அமா்வு கூறியதாவது: வழக்கு விசாரணையை மேற்பாா்வை செய்யும்போது அல்லது மேல்முறையீடு மற்றும் மறுஆய்வு விசாரணை மேற்கொள்ளும்போது விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் குறித்து எதிா்மறையான கருத்துகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.
மாவட்ட நீதித் துறையில் பணியாற்றும் நீதிபதிகளின் பாதுகாவலராக உயா்நீதிமன்றம் இருக்க வேண்டும். விசாரணை நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக அவருக்கு எதிராக பாதகமான அல்லது இழிவுபடுத்தும் கருத்துகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாது.
Advertisement
இதுபோன்ற கருத்துகள் அல்லது கடுமையான விமா்சனங்கள் மாவட்ட நீதித் துறை நம்பிக்கையை இழக்க வழிவகுப்பதுடன், சம்பந்தப்பட்ட நீதிபதியின் தொழில்முறை வாழ்க்கையையும் சீா்குலைக்கக் கூடும் என்று தெரிவித்தது.