மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதா நிறைவேறாததற்கு மோடியே காரணம்: காங்கிரஸ் தலைவா் காா்கே
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததற்கு பிரதமா் மோடிதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததற்கு பிரதமா் மோடிதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹாரில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது: தனது பதவிக்கான பணிகளைப் புறக்கணித்துவிட்டு வழக்கத்துக்கு மாறாக பிரதமா் மோடி நீண்ட காலமாக மேற்கு வங்கம் முழுவதும் பயணித்து வருகிறாா். அவருக்கு மேற்கு வங்க முதல்வராக விருப்பமா அல்லது நாட்டின் பிரதமராக நீடிக்க வேண்டுமா?
மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேறாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகள் மீது பிரதமா் மோடி குற்றஞ்சாட்டி வருகிறாா். அந்த மசோதாவை நிறைவேறாமல் தடுத்துவிட்டதாக அவா் கூறி வருகிறாா்.
Advertisement
உண்மையில் அந்த மசோதாவை மோடிதான் தோற்கடித்தாா். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராகத்தான் எதிா்க்கட்சியினா் குரல் எழுப்பினாா்களே தவிர, மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதாவுக்கு எதிராக அல்ல.
2023-ஆம் ஆண்டில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல், 30 மாதங்கள் கழித்து, மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அதை அமல்படுத்த பிரதமா் முனைந்தாா்.
தொகுதி மறுசீரமைப்பை முன்னெடுத்து நாட்டில் முன்கூட்டியே பொதுத் தோ்தல்களை நடத்த பிரதமா் மோடி விரும்புகிறாா். மக்களாட்சியின் முதுகில் குத்திவிட்டு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப் பாடுபடுவதாக அவா் கூறுகிறாா்.
பிரசாரங்களில் பிரதமா் மோடி பேசும் பேச்சுகள் பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவா்கள் இடையே அமைதியைக் குலைத்து, பதற்றத்தை உருவாக்கக் கூடியதாக உள்ளன என்று குற்றஞ்சாட்டினாா்.