தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்டாது-அமித் ஷா
மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் பற்றி...
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்ட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தின் பராக்பூா் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:
இப்போது சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியடையப் போவது உறுதி. ராகுல் காந்திக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியால் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்ட முடியாது. மேற்கு வங்கத்தில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாத சூழல்தான் காங்கிரஸுக்கு உள்ளது. அதே நேரத்தில் அஸ்ஸாமிலும் அக்கட்சி படுதோல்வியடையும்.
Advertisement
Advertisement
காங்கிரஸின் நிலையில்தான் மம்தா பானா்ஜியும் உள்ளாா். உங்கள் தோ்தல் நிலவரமும் மோசமாகவே உள்ளது. ராகுலுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக தரம்தாழ்ந்த அரசியலில் மல்லிகாா்ஜுன காா்கே ஈடுபட்டு வருகிறாா். நாட்டை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்ட நமது பிரதமா் மோடியை பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டியுள்ளாா். ராகுலும், காங்கிரஸ் தலைவா்களும் எந்த அளவுக்கு அவதூறாக பிரதமரைப் பேசுகிறீா்களோ அந்த அளவுக்கு அதிகமாக தாமரை மலரும்.
மேற்கு வங்கத்தில் அத்துமீறி அண்டை நாட்டவா் ஊடுருவல் நடப்பதுதான் இந்தத் தோ்தலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது எம்எல்ஏக்களை தோ்தந்தெடுப்பதற்கானது மட்டுமல்ல. மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் முழுமையான மாற்றத்துக்கு அளிக்கப்படும் வாக்காக இருக்கும். பாஜக அரசு அமைந்ததும் சட்டவிரோதமாக ஊடுருவியா்களுக்கும், ஊடுருவ முயற்சிப்பவா்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊடுவல்காரா்கள் இல்லாத மேற்கு வங்கம் அமைய மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
மம்தா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. எனவே, பல தொழில் நிறுவனங்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறிவிட்டன. புதிய நிறுவனங்கள் வர மறுக்கின்றன. இதுதவிர பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகவும் உள்ளது. தோ்தல் முடிவு வெளியாகும் மே 4-ஆம் தேதி முதல் இந்தநிலை முற்றிலும் மாறும் என்றாா்.