தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது! அமித் ஷா பிரசாரம்!
மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் பற்றி...
தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைக்கூட தொடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை (ஏப். 23) நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் டம் டம் உத்தர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
அப்போது அவர் பேசியதாவது:
”பயங்கரவாதத்தை வேரறுத்த பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘தீவிரவாதி’ என்று அழைக்கிறார். மோடியை நீங்கள் எவ்வளவு இழிவுப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு பிரகாசமாக தாமரை மலரும்.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உங்களால் இரட்டை இலக்க எண்ணிக்கையைக் கூடத் தொட முடியாது. காங்கிரஸ் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும்.” எனத் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ”பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி. அவருக்குப் பெண் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றில் விருப்பம் கிடையாது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் பிரதமர் மோடியை ஒரு தீவிரவாதி என்று கூறுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கவில்லை” என்றார்.
கார்கேவின் கருத்து பாஜக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகச் சென்று புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.