நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
செய்யறிவுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அமித் ஷா பேச்சு...
நாட்டின் தொழில் துறை மேம்பாட்டில் குஜராத் மாநிலத்திற்கு முக்கியப் பங்கு உள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 17) தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் செய்யறிவுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மில்லியன் மைன்ட் என்னும் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைத்து அமித் ஷா பேசியதாவது:
Advertisement
தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடியின் தலைமையிலான நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தின் தூண்களாக செய்யறிவும், தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ளது. உலகின் எந்தவொரு வளர்ச்சியடையும் துறையின் முன்னோடியாக இந்தியா மாறியுள்ளது. இத்தகைய வளர்ச்சியடையும் துறைகளே உலகின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. இந்தியா தனது வலுவான நிலைத்தன்மையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது.
2002 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், தொழில் துறை முன்னேற்றம், உள்கட்டமைப்பு, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் அடிப்படையிலான முன்னேற்றத்தில் உலகளாவிய முகவரியாக குஜராத் மாறியுள்ளது.
தொழில் துறையில் இத்தகைய நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி வேறு எங்கும் இல்லாத வகையில் குஜராத்தில் சாத்தியமாகியுள்ளது. தொழில்முனைவின் பண்புகளை குஜராத் சமூகம் பாரம்பரியமாகவே ஏற்றுக்கொண்டது என்பதே இதற்கு முக்கியக் காரணம் என அமித் ஷா குறிப்பிட்டார்.