திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 5 நாள்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹாத்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. 15 வயது சிறுமி மீதான மிருகத்தனமான தாக்குதல் இளம் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும், இதுபோன்ற கொடூரமான குற்றங்களுக்கு எதிராக வலுவான தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது. சிறுமிகளுக்கு எதிரான வன்முறை மனித உரிமைகளின் ஒட்டுமொத்த மீறலாகும்.
Advertisement
தப்பிப்பிழைத்தவர் மீது ஆழ்ந்த உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் வடுக்களை விட்டுச் செல்கிறது. இத்தகைய சம்பவங்களுக்கு உடனடி பொறுப்புக்கூறல் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை தேவைப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் ஆணையத் தலைவர் விஜயா ரஹாத்கர் கூறியுள்ளார்.
மேலும், பாரதிய நியாயா சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எஃப். ஐ. ஆர். விரைவாக பதிவு செய்யப்படுவதையும், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்வதையும், நியாயமான மற்றும் காலக்கெடுவுக்குள் விசாரணையையும், விரிவான மருத்துவம், ஆலோசனை, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆதரவையும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை 5 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் டிஜிபி}ஐ மகளிர் ஆணையத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.