கோவை சிறுமி படுகொலை: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
கோவை சிறுமி படுகொலை வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
கோவை சிறுமி படுகொலை வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான வேதனையளிக்கும் செய்திகளை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.
தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, காணாமல்போன நிலையில் கண்ணம்பாளையம் குளத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் உடனடியான மற்றும் கடுமையான நடவடிக்கையை காலக்கெடுவுக்குள் எடுக்குமாறு தமிழக காவல்துறை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் கடிதம் எழுதியுள்ளார். 7 நாள்களுக்குள் விரிவான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் கோரியுள்ளது.
இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, பாரதிய நியாயா சன்ஹிதா, போக்ஸோ சட்டத்தின்கீழ் பிரிவுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைதுசெய்து காவலில் வைத்து விசாரிப்பது, உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் பரிசோதனை, சிசிடிவி காட்சிகள், டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்ட ஆதாரங்களும் கோரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் கோரப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை மிகுந்த கவனத்துடனும் விரைவாகவும் நடத்த வேண்டும்.
இந்தச் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் கடுமையாகக் கண்டிப்பதுடன், சிறுமிகளுக்கு எதிரான மிருகத்தனமான வன்முறை குற்றங்கள் கொடூரமானவை என்றும், சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ச. ஜோசப் விஜய், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றும் உறுதியளித்துள்ளார்.