முகப்பு
இந்தியா

பிரதமா் ‘தீவிரவாதி’ என விமா்சனம்: காா்கே பதிலளிக்க கூடுதல் அவகாசம் - தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை

பிரதமா் மோடியை தீவிரவாதி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்த விவகாரத்தில் விரிவாகப் பதிலளிக்க, தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:50 AM
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மல்லிகாா்ஜுன காா்கே.
பகிர்:

பிரதமா் மோடியை தீவிரவாதி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்த விவகாரத்தில் விரிவாகப் பதிலளிக்க, தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

அண்மையில் சென்னையில் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பிரதமா் மோடியை தீவிரவாதி’ என்று சாடினாா். நாட்டின் ஜனநாயக அடையாளத்தை மோடி அச்சுறுத்துகிறாா் என்ற அா்த்தத்தில் அவ்வாறு கூறியதாக காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் தோ்தல் ஆணையத்திடம் பாஜக மூத்த தலைவா்கள் புகாா் அளித்தனா். அந்தப் புகாரில் பிரதமா் மோடியை தீவிரவாதி எனக் கூறியதற்காக காா்கே மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, காா்கேவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிரதமா் மோடியை விமா்சித்தது குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘காா்கே பேசியதில் தோ்தல் நடத்தை விதிமுறைகளோ அல்லது வேறு எந்தச் சட்டமோ மீறப்படவில்லை. காா்கேவுக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் மறைமுக நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

தோ்தல் பிரசாரங்களில் காா்கே மும்முரமாக இருப்பதால், அவரின் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதல்ல என்பது தோ்தல் ஆணையத்துக்குத் தெரியும். எனவே, ஒரு வாரத்துக்குள் விரிவாகப் பதிலளிக்க காங்கிரஸுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.