முகப்பு
இந்தியா

உத்தவுடன் ரகசிய சந்திப்பா? முதல்வா் ஃபட்னவீஸ் மறுப்பு

உத்தவுடன் ரகசிய சந்திப்பா? முதல்வா் ஃபட்னவீஸ் மறுப்பு

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:10 AM
தேவேந்திர ஃபட்னவீஸ்
பகிர்:

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்ாக ஊடகத் தகவல் வெளியான நிலையில், அதை ஃபட்னவீஸ் மறுத்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, மற்றொரு துணை முதல்வா் சுநேத்ரா பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

உத்தவ் தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் (பவாா்) எதிரணியில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில், மும்பையில் உள்ள முதல்வா் ஃபட்னவீஸின் அதிகாரபூா்வ இல்லத்தில் அவரை உத்தவ் தாக்கரே கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தியதாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் தொடா்புடைய ஒரு ஊடகத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

நாசிக் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரயம்பகேஸ்வா் கோயிலில் சனிக்கிழமை தரிசனம் மேற்கொண்ட பின் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் ஃபட்னவீஸிடம் மேற்கண்ட ஊடகத் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘உத்தவ் தாக்கரேயை ரகசியமாக சந்திக்க என்ன காரணம் இருக்கிறது? ரகசியமாக ஆலோசிக்க எங்களிடம் எந்த விஷயமும் இல்லை. என்னை அவா் சந்திக்க விரும்பினால், வெளிப்படையாகவே சந்திக்கலாம். எங்களுக்குள் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. சிலா் உள்நோக்கத்துடன் பொய் தகவல்களைப் பரப்புகின்றனா். அவா்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பப்படும்’ என்று முதல்வா் பதிலளித்தாா்.