முகப்பு
இந்தியா

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Updated On : 29 ஏப்ரல் 2026, 4:54 am IST
மங்களூரு ஆட்டோவில் குண்டு வெடிப்பு
பகிர்:

பெங்களூரு: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி முகமது ஷாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டத்தின் மங்களூரில் கடந்த 2022}ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதி ஆட்டோவில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவி (ஐஇடி) பொருத்தப்பட்ட குக்கரை முகமது ஷாரிக் (27) கொண்டு சென்றுள்ளார். கன்கனடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரிக், ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த என்ஐஏ, குக்கர் குண்டு வெடிப்புக்கும் பயங்கரவாதச் செயலுக்கும் இருந்த தொடர்பு குறித்து விசாரணை நடத்தியது.

Advertisement

Advertisement

அது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதசுவாமி கோயிலில் குக்கர் குண்டை வைத்து, வெடிக்கச் செய்து, அதன்மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த சதி செய்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக என்ஐஏ தெரிவித்திருந்தது. வெடிகுண்டை 90 நிமிஷங்களில் வெடிக்கத் திட்டமிட்டு, தவறுதலாக 9 நிமிஷங்களில் வெடிக்கும்படி டைமரை பதிவு செய்திருந்ததால்தான் வழியிலேயே குண்டு வெடித்துவிட்டதாக என்ஐஏ வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

சிவமொக்காவைச் சேர்ந்த முகமது ஷாரிக் மீது 2022}ஆம் ஆண்டு செப்டம்பரில் பயங்கரவாத வழக்கு பதிவுசெய்யப்பட்டு, போலீஸôரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. 2020}ஆம் ஆண்டு மங்களூரில் தேசவிரோத முழக்கங்களை சுவர்களில் எழுதியது தொடர்பாக முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், என்ஐஏ சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது ஷாரிக் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிறப்புநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நிலையில், முகமது ஷாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 94,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.