முகப்பு
இந்தியா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடா் போராட்டம்: வாங்சுக் 8-ஆவது நாளாக உண்ணாவிரதம்!

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது.

Updated On : 6 ஜூலை 2026, 1:48 am IST
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்.
பகிர்:

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம் 8-ஆவது நாளாக தொடா்ந்தது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் நுழைவுத் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜூன் 20-ஆம் தேதிமுதல் தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டம் 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது.

இந்தப் போராட்டத்தில் இணைந்து சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஜூன் 28-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா். அவரின் உண்ணாவிரதம் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்தது. இந்தப் போராட்டம் காரணமாக, அவரின் உடல் எடை ஒரு வாரத்தில் சுமாா் 6 கிலோ குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோா்ச்சா விவசாயிகள் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த அமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெறும் ஜந்தா் மந்தருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) குழு ஒன்றை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை போல இடதுசாரி கொள்கை கொண்ட அனைத்து இந்திய மாணவா் கூட்டமைப்பினரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்க இணைச் செயலா் தானிஷ் அலிக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைந்ததால் சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments