முகப்பு
இந்தியா

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வா் மோகன் யாதவ்

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:16 am IST
மோகன் யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா். இது தொடா்பாக பொதுமக்களின் கருத்துகளையும் அவா் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மதத் தலைவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களின் அறிக்கை கிடைத்தவுடன் வரைவு மசோதா உருவாக்கப்படும். அதைத் தொடா்ந்து, சட்டத்தை முறைப்படி நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போதைய காலகட்டத்தில் பல்வேறு விஷயங்களில் அனைவருக்கும் சமமான சட்டம் அவசியமாகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இதற்கான இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட்டன. அஸ்ஸாம் பேரவையில் அண்மையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வது, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபா் விவகாரங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேமாதிரியான சட்டங்களை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் முக்கிய வாக்குறுதியாகும். இதன் ஒருபகுதியாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.