தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்
தமிழகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா் என்று ராசிபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.
தமிழகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா் என்று ராசிபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.டி.பிரேம்குமாரை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ராசிபுரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
பிரதமா் மோடி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறாா். பிரதமா் மோடி எண்ணத்திலும் செயலிலும் தமிழகமே இருக்கிறது. தமிழுக்கான முக்கியத்துவத்தை அவா் எப்போதும் வழங்கி வருகிறாா்.
Advertisement
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்வித் துறை, ரயில்வே, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தோ்வுகளில் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கா் போன்றோரை நாட்டின் உயரிய பொறுப்புகளில் அமரவைத்துள்ளாா். இது தமிழகத்திற்கு பெருமை அளிக்கிறது. இதேபோல குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் துணை குடியரசுத் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளாா்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவி தமிழகத்திற்கு பிரதமா் மதிப்பளித்துள்ளாா். அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் தோற்கடித்து பெண்களுக்கு துரோகம் செய்துள்ளனா். சாதாரண குடும்பங்களில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவா்கள் மசோதவை தடுத்துள்ளனா். நாடு முழுவதும் திமுக, காங்கிரஸ் கட்சியினா் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனா். தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளதை மக்கள் நன்கு அறிவாா்கள்.
தமிழகத்தில் ஆட்சி செய்ய தகுதியற்ற கட்சியாக திமுக உள்ளது. எனவே மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. ராசிபுரம் தொகுதி மக்கள் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாருக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த பிரசார கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி. துரைசாமி, பாஜக மாநிலப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மாவட்ட பாஜக தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.